Tuesday, July 20, 2010

அங்கும் இங்கும்

அங்கும் இங்கும் எங்குமாய் அமைந்த தேவ தேவனே
ஆதியாய் அனாதியாய் சமைந்த ஜோதி ரூபனே
மங்கலங்கள் யாவும் நல்கும் அம்பிகை மணாளனே
மக்கள் செய்யும் பூஜையில் மகிழ்ந்தருள் நடேசனே!

ஓம் நமசிவாய ஓம் ஓம் நமசிவாயா
ஓம் நமசிவாய ஓம் ஓம் நமசிவாயா

எந்த இல்லம் ஆயினும் இருந்த இல் சிதம்பரம்
எடுத்த பீடம் ஆலயம் தொடுத்த கூரை கோபுரம்
செந்தமிழ்ச் சொல் மந்திரம் திருந்து மன்பே ஆகமம்
சிவந்த பாத பங்கயம் உவந்தருள் நடேசனே!


(ஓம் நமசிவாய)

மன்றிலே எடுத்த கால் என் மனையிலும் எடுத்து வை
மனதிலே நினைந்த நன்மை விரைவிலே முடித்து வை
என்றும் தீமை அணுகிடாமல் ஈசனே தடுத்து வை
ஏத்தும் அன்பர் குழுவில் என்னை சேர்த்து வை நடேசனே!

(ஓம் நமசிவாய)

ஆ பயந்த ஐந்தினோடும் பால் பழம் பஞ்சாமிர்தம்
ஆலவாய் கரும்பு தெங்கு தேன் சுகந்த சந்தனம்
நீ பயந்த யாவையும் நினக்களித்தேன் ஈசனே
நேர்த்தியாய் அனைத்தும் ஆடி வாழ்த்துவாய் நடேசனே!

(ஓம் நமசிவாய)

அட்ட நாக பூஷணம் அளிக்க வல்லன் அல்லனே
ஆனை மான் சிறுத்தை வேட்டை ஆட வல்லன் அல்லனே
இட்ட மாலை ஆடையோடு தொட்டு வைத்த சந்தனம்
என்றும் நல்க வல்லன் வல்லன் கொண்டருள் நடேசனே!

(ஓம் நமசிவாய)

வில்லினால் அடிக்கவோ வீசுகல் பொறுக்கவோ
மிதித்த போது கை பிரம்பை மேலும் நான் எடுக்கவோ
நல்ல பிள்ளை என்னை ஆளும் நாதனும் நீ அல்லவோ
நாளும் நான் படைத்த சொல்லும் பூவும் கொள் நடேசனே!


(ஓம் நமசிவாய)

ஆட நீ எடுத்ததாய் அறிந்தவர் இயம்புவர்
அல்ல அல்ல என் தலை மேல் சூட என்று சொல்கிறேன்
ஈடில்லாத தெய்வம் நீ இடப்புறம் எடுத்த கால்
எந்த நோக்கில் என்று சொல்ல வந்தருள் நடேசனே!

(ஓம் நமசிவாய)

மழுவெடுத்து எதை விளக்க மன்று தோறும் ஓடினாய்
மதியிருக்க புனலெடுத்து மத்தனாய் ஏன் ஆடினாய்
கழுவெடுத்து நடனம் ஆடும் காட்டில் என்ன தேடினாய்
கையில் நான் எடுத்த தூபம் கொள்ளுவாய் நடேசனே!

(ஓம் நமசிவாய)

எடுத்த தூபம் ஆதியாவும் ஏற்றருள் மகேசனே
இன்று நான் படைத்த யாவும் கொள்ளுவாய் சபேசனே
தடுத்த பண்டை வினையகற்றி தாங்குவாய் சர்வேசனே
சரணம் உன்னை அன்றி ஏது ஏது தாங்குவாய் நடேசனே!

(ஓம் நமசிவாய)

வாழி நீ! படைக்கும் தெய்வம் மலரணை அமர்ந்ததாம்
வகுத்தளிக்கும் தெய்வம் கூட அரவணை கிடந்ததாம்
ஊழி தோறும் ஐந்தொழில் உவந்து செய்யும் ஈசனே
ஓய்ந்து சற்றென் நெஞ்சனைக்கண் சாய்ந்து கொள் நடேசனே!

(ஓம் நமசிவாய)

ஓம் நமசிவாய ஓம் சிவாய நம ரூபனே
ஓதும் ஐந்து சபையில் ஆடும் பதனே சங்கீதனே
வாமியாய் தழைத்த சிவகாமி காதல் நேசனே
மாறிலாத கருணை நீ வழங்குவாய் நடேசனே!


(ஓம் நமசிவாய)

No comments: